பிரிஸ்பேன்: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், சைமான் அன்வர் சதத்தின் உதவியுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 278 ரன்களை குவித்தபோதிலும், அயர்லாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை இப்போட்டி பரபரப்பாக நீடித்தது.
இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் பி பிரிவில் உள்ள நாடுகளான அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நாடுகள் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று பலப்பரிட்சை நடத்தின. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு போட்டி தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இந்த தொடரில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்றுவருகிறது. இருப்பினும் அயர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 300க்கும் மேல் ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகளை விரட்டிச் சென்று பிடித்து வெற்றி பெற்றிருந்தது. எனவே, சேஸிங்கை அந்த அணி தேர்ந்தெடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் போராடி தோற்றிருந்த நிலையில் இப்போட்டி அவர்களுக்கு முக்கியத்துவம் பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக அம்ஜத் அலியும், ஆன்ட்ரி பெரெங்கரும் களமிறங்கினர். அதில் ஆன்ட்ரி 13 ரன்களில் நடையை கட்ட, ஒன்டவுன் பேட்ஸ்மேனாக, பாலக்காட்டை சேர்ந்தவரான கிருஷ்ண சந்திரன் களமிறங்கினார். 4 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் பவுல் ஸ்டிர்லிங் பந்தில் கெவின் ஓ பிரையனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பிறகு மும்பையை பூர்வீகமாக கொண்ட, அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டீல் 4 ரன்களில் நடையை கட்ட, மறுபக்கம் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அம்ஜத் அலியும், 45 ரன்கள் எடுத்திருந்தபோது, கெவின் ஓ பிரைன் பந்தில் மேக்ஸ் சொரேன்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஐக்கிய அரபு எமிரேட் அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 92 ரன்களை எடுத்து தடுமாறியது. ஆனால், குர்ரம் கான் எடுத்த 36 ரன்களும், அம்ஜத் ஜாவீத் எடுத்த 42 ரன்களும் கை கொடுக்க, மறுமுனையில் அபாரமாக ஆடிய சைமான் அன்வர் 106 ரன்கள் குவித்து அணியை மீட்டார். உலக கோப்பையில் சதம் அடித்த முதலாவது யு.ஏ.இ வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு பேட்டிங் செய்ய வந்த அயர்லாந்தின் தொடக்க வீரர் பவுல் ஸ்டிர்லிங் 3 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் வில்லியம் போர்ட்டர்பீல்ட் 37 ரன்களிலும், எட் ஜோய்ஸ் 37 ரன்களும், நியால் ஓ பிரைன் 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
எனவே 25 ஓவர்களில் அந்த அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அரபு எமிரேட்ஸ் வெற்றி பெற வாய்ப்பு பிரமாதமாக இருந்தது. ஆனால், கேரி வில்சனின் 80 ரன்களும், கெவின் ஓ பிரைனின் 50 ரன்களும் அணியை சரிவில் இருந்து மீட்டன. இதில் வில்சன் 69 பந்துகளிலும், கெவின் 25 பந்துகளிலும் அதிரடியாக ரன்களை குவித்திருந்தனர்.
47.3 ஓவர்களில் கேரி வில்சன் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 267ஆக இருந்தது. எனவே இறுதி கட்டத்தில் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் 2வது பந்திலேயே அயர்லாந்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எட் ஜாய்ஸ் பேட்டிங் செய்யும்போது, பந்து ஸ்டம்பில் பட்டும் பெய்ல்ஸ் விழாமல் போனது.. கேரி வில்சனுக்கு டிஆர்எஸ் முறையில் ரிவியூ செய்தபோது, எல்பிடபிள்யூ ஆனது நன்கு தெரிந்தபோதிலும், கள நடுவரின் தவறான தீர்ப்பால் அந்த அவுட் தரப்படாமல் போனது போன்ற அதிருஷ்டங்களும் அயர்லாந்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.