அடிலைட்: இந்தியாவை சந்திக்க எங்களுக்கு எப்போதும் பயம் இருந்ததில்லை. உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் நிலை வந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.
அடிலைடில் செய்தியார்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவை அரை இறுதிப் போட்டியில் சந்திக்கும் நிலை வந்தால் அதற்காக பயப்பட மாட்டோம். துணிச்சலாக எதிர்கொள்வோம். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவை தோற்கடித்ததே இல்லை என்ற நிலையையும் மாற்றுவோம்.
பாசிட்டிவான மனோநிலையுடன் இந்தியாவை சந்திப்போம். எங்களுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அதை கருதுவோம். சாதகமான மன நிலையில் போட்டியைச் சந்தித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ஆஸ்திரேலியாவை காலிறுதிப் போட்டியில் நிச்சயம் வெல்வோம். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது (வெள்ளிக்கிழமை பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன).
வேகப் பந்து வீச்சாளர் முகம்மது இர்பான இல்லாவிட்டாலும் கூட நாங்கள் பலமானவர்களாகவே உள்ளோம். தென் ஆப்பிரி்க்காவை வெல்லும்போது ஏன் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நிச்சயம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் நடப்புச் சாம்பியன். அது அவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். மேலும் கடந்த 3 மாதமாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் ஆடி வருகின்றனர். நல்ல முறையில் அவர்கள் உலகக் கோப்பைக்குத் தயாராகியு்ளனர். அது அவர்களுக்கு உதவி வருகிறது.
கேப்டன் டோணி அனுபவம் வாய்ந்த நல்ல தலைவராக இருக்கிறார். வீரர்களும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இது அவர்களுக்கு உதவுகிறது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி இந்தியா உலகக் கோப்பைத் தொடரில் ஆடி வருகிறது என்றார் மிஸ்பா.