லண்டன் : உலகக்கோப்பை தொடருக்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்தை சென்றடைந்த நேரத்தில் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார் இந்திய அணியின் துணை கேப்டன்.
அது எப்படிப்பா முடியும் என்கிறீர்களா? இது ஒருநாள் அணியின் துணை கேப்டன் அல்ல... டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே.
ஐபிஎல் தொடரில் அசத்தி, எப்படியாவது உலகக்கோப்பை அணிக்குள் நுழைந்து விடலாம் என பகல் கனவு கண்டு வந்தார் ரஹானே. ஆனால், அவரால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற முடியவில்லை.
சச்சின் சொல்றது தான் சரி.. அனில் கும்ப்ளே ஐடியா சரிவராது.. தோனி இந்த இடத்தில் தான் பேட்டிங் ஆடணும்!
இதனையடுத்து, டெஸ்ட் அணியில் தன் இடத்தையும், துணை கேப்டன் பதவியை தக்க வைக்கும் பொருட்டு, இங்கிலாந்து கவுன்டி அணிகளில் இணைந்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடிவு செய்தார்.
அதன்படி, இதுவரை எந்த இந்திய வீரரும் ஆடி இராத ஹாம்ஷயர் அணியில் இணைந்தார். அந்த அணிக்காக அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கலக்கி உள்ளார். இதில் ஒரு சாதனையும் அடங்கி இருக்கிறது.
நாட்டிங்ஹாம்ஷயர் அணியை எதிர்த்து ஆடிய ஹாம்ஷயர் அணியின் முதல் இன்னிங்க்ஸ்-இல் ரஹானே 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 197 பந்துகளில் 119 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம், தன் முதல் கவுன்டி போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார் ரஹானே. இதற்கு முன்பு பியுஷ் சாவ்லா சசக்ஸ் அணிக்காகவும், முரளி விஜய் எசக்ஸ் அணிக்காகவும் தங்கள் முதல் கவுன்டி போட்டியில் சதம் அடித்துள்ளனர்.
முரளி விஜய் கடந்த ஆண்டு இந்த சாதனையை செய்து இருந்தார். அவருக்கு அடுத்து ரஹானே இந்த சாதனையை செய்துள்ளார்.