கடைசி வாய்ப்பு
இந்த நிலையில், ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு உள்ளிட்ட ஐந்து வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் ஆட கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாற்று வீரர்
தற்போது உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக இந்த ஐந்து வீரர்களில் ஒருவர் இங்கிலாந்து சென்று உலகக்கோப்பை அணியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.
ஐந்து வீரர்கள் யார்?
அந்த ஐந்து வீரர்கள் - அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா, அக்சர் பட்டேல். இந்த ஐந்து வீரர்களில் இஷாந்த் சர்மா பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
டெஸ்ட் வீரர்
இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இஷாந்த் சர்மாவை தேர்வு செய்வதில்லை. இந்த நிலையில், திடீரென அவரது அனுபவத்தை கணக்கில் கொண்டு மாற்று வீரர்களில் ஒருவராக இஷாந்த் சர்மாவை தேர்வு செய்துள்ளனர்.
வாய்ப்பு எப்படி?
உலகக்கோப்பை தொடர் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற உள்ளது. இதற்கிடையே, இந்திய பேட்ஸ்மேன்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், ரிஷப் பண்ட், அம்பதி ராயுடுவுக்கு அணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் தொடரில் உலகக்கோப்பை வீரர்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலும், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.