மும்பை : உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என இதுவரை மூன்று கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஏமாற்றத்தை பொது வெளியில் வெளிப்படுத்தி உள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் மீது இருக்கும் எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்துவது புதிய ட்ரென்டாக மாறி வருகிறது. யார் அந்த வீரர்கள்?
இந்திய உலகக்கோப்பை அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. உலகக்கோப்பைக்கு முன்பு வரை தொடர்ந்து பல தொடர்களில் இடம் பெற்று வந்த அம்பதி ராயுடு, கடைசியாக ஆடிய ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடவில்லை என்பதை காரணமாக வைத்து அணியில் இடம் மறுக்கப்பட்டது.
முரளி விஜய்க்கு அப்புறம்.. இவர் தான்.. இங்கிலாந்தில் கலக்கல் சாதனை செய்த நம்ம துணை கேப்டன்!
அவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். விஜய் ஷங்கரை 3டி வீரர் என தேர்வுக் குழு தலைவர் புகழ்ந்தார். அதை வைத்தே அவரை கிண்டல் செய்து, உலகக்கோப்பையில் 3டி வீரர் ஆடுவதால் தான் "3டி கண்ணாடி வாங்கப் போகிறேன்" என கூறி தன் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார்.
அவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் ஜுனைத் கான், கடைசி நேரத்தில் உலகக்கோப்பை அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அவருக்கு பதிலாக அனுபவ வீரர்களை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜுனைத் கான் தன் வாயில் கருப்பு பிளாஸ்திரி ஒட்டி, எந்த வார்த்தையும் கூறாமல், ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர வைத்தார்.
அடுத்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேவிட் வில்லி, முதல் கட்ட உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார். எனினும், வெறும் 3 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள ஜோப்ரா ஆர்ச்சருக்காக, அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் ஒரு குழந்தை நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு, தான் நேர்மறையாக இருப்பதாகவும், இப்போதும் வாழ்க்கையில் வெற்றி பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு நாசூக்காக தேர்வுக் குழுவினருக்கு தன் எதிர்ப்பை கூறி இருந்தார்.
ஆக, 2019 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்த புதிய ட்ரென்ட் கிரிக்கெட் உலகில் துவங்கி இருக்கிறது. அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்கள் இனி இப்படி ஏதாவது தெரிவித்தே ஆக வேண்டும் என்ற நிலையை கிரிக்கெட் உலகம் எட்டப் போகிறதோ?