ஐபிஎல் அளித்த வாய்ப்பு
2018 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 602 ரன்கள் குவித்தார் அம்பதி ராயுடு. அதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்று ஆசிய கோப்பை தொடர் முதல் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வந்தார்.
மூன்று போட்டிகளில்..
பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் அம்பதி ராயுடு அடித்த 90 ரன்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால், அதன் பின் மார்ச் மாதம் அவர் பங்கேற்ற ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் 2, 18, 13 என சொற்ப ரன்களே எடுத்தார். அதையடுத்து கடைசி இரண்டு போட்டிகளில் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாய்ப்பு சந்தேகம்
உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடிய கடைசி ஒருநாள் தொடர் அதுதான். அதனால், ராயுடுவுக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என கூறப்பட்டது. 2019 ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பாக ரன் குவித்தால் அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
ஐபிஎல் சறுக்கல்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அம்பதி ராயுடு நடப்பு ஐபிஎல் தொடரில் ரன் குவிக்கவில்லை. இதுவரை 8 போட்டிகளில் 138 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 19.71 மட்டுமே. இதனால், உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட போது, அம்பதி ராயுடு பெயர் அதில் இடம்பெறவில்லை.
3 போட்டிகள் தான் காரணமா?
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு உலகக்கோப்பை அணித் தேர்வின் போது ஐபிஎல் செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது என கூறியது. அப்படிப் பார்த்தால், ஆஸ்திரேலிய தொடரின் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத காரணத்தால், வாய்ப்பை இழந்துள்ளார் ராயுடு.
அணியில் இடம் கிடைக்குமா?
அம்பதி ராயுடுவுக்கு பதில் நான்காவது வரிசையில் களமிறங்க விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராயுடுவுக்கு தற்போது 33 வயதாகும் நிலையில், இனி அவர் உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் இடம் பெறமுடியுமா என்பதும் சந்தேகமே. கிட்டதட்ட ராயுடுவின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.