சரியான நபர்
இந்திய அணியில் நான்காவது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய எந்த வீரர் சரியாக இருப்பார் என்ற குழப்பம் கடந்த வருடம் முழுவதும் நிலவியது. பல வீரர்கள் வாய்ப்பு பெற்ற நிலையில், அம்பதி ராயுடு மட்டுமே அந்த இடத்திற்கு சரியான நபராக அமைந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளில், பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்தார்.
வாய்ப்பு
எனினும், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று போட்டிகளில் சொதப்பினார் என்ற ஒரே காரணத்தை வைத்து, அவரை நீக்கி விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் விஜய் ஷங்கர் ஓரளவு சிறப்பாக ஆடினார். முன்னதாக விஜய் ஷங்கர் மிடில் ஆர்டரிலும் சில போட்டிகளில் ரன் குவித்து இருந்தார்.
பலர் ஆதரவு
இதை காரணமாக வைத்து அனுபவ வீரர் அம்பதி ராயுடுவுக்கு மாற்றாக, 9 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள விஜய் ஷங்கருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது. தேர்வுக் குழுவின் இந்த முடிவை பல ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கூட ஆதரித்துள்ளனர்.
முப்பரிமான வீரர்
ராயுடுவை விட விஜய் ஷங்கருக்கு ஏன் முக்கியத்துவம் என்ற கேள்விக்கு பதில் அளித்த தேர்வுக் குழு, விஜய் ஷங்கர் முப்பரிமானத்தில் (3 Dimensional (3D)) செயல்படுகிறார் என கூறியது. அதாவது, விஜய் ஷங்கர் ஆல்-ரவுண்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், பினிஷர் என எந்த இடத்திலும் களமிறக்கலாம் என்ற கோணத்தில் இப்படி கூறியது. இதை வைத்துத் தான் கலாய்த்துள்ளார் அம்பதி ராயுடு.
அந்த பதிவு
ராயுடு தன் ட்விட்டர் பதிவில், "உலகக்கோப்பையை காண புதிதாக 3டி கண்ணாடி வாங்கி இருக்கிறேன்" எனக் கூறி கண்ணடித்து, நாக்கை நீட்டி நக்கல் செய்யும் ஈமோஜிக்களையும் பதிந்துள்ளார்.
|
மறைமுக கிண்டல்
இதன் அர்த்தம் தன் இடத்தை தட்டிப் பறித்த "3டி" வீரர் விஜய் ஷங்கர் உலகக்கோப்பையில் என்ன செய்கிறார் என பார்க்கலாம் என்பது தான் என ரசிகர்கள் கீழே கருத்து கூறி வருகின்றனர். 3டி என்ற வார்த்தையை மறைமுகமாக பயன்படுத்தி தேர்வுக்குழுவை வேற லெவலில் கிண்டலடித்துள்ளார் ராயுடு.