குழப்பம்
இந்திய அணி உலகக்கோப்பை பயற்சிப் போட்டிகளில் இன்னும் சில தினங்களில் பங்கேற்க உள்ளது. இந்த சூழலில், இந்திய அணி வலுவானதாக காட்சி அளித்தாலும், அணியில் சில குழப்பங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் பேட்டிங்கின் நான்காவது வரிசையில் யாரை ஆடவைக்கலாம் என்பது.
ரோஹித் கருத்து
அந்த இடத்தில் பல வீரர்கள் ஆடி இருந்தாலும், யாரும் சரியாக வரவில்லை. எனவே, ரோஹித் சர்மா நான்காவது வரிசையில் தோனி இறங்கினால் சரியாக இருக்கும் என தன் கருத்தை கூறினார்.
கும்ப்ளே யோசனை
அதே போல, அனில் கும்ப்ளே இந்திய அணி தன் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களான ரோஹித், தவான், கோலி, தோனியை வரிசையாக முதல் நான்கு இடங்களில் ஆட வைக்க வேண்டும் என கூறி இருந்தார். தோனி நான்காவது இடத்தில் ஆட வேண்டும் என்பதையே கும்ப்ளே கூறி இருந்தார்.
சச்சின் சொல்லும் இடம்
ஆனால், சச்சின் டெண்டுல்கர் தோனி இப்போது களமிறங்கி வரும் ஐந்தாம் இடத்திலேயே பேட்டிங் இறங்குவது தான் சரி என்று கூறியுள்ளார். அதற்கு, நியாயமான காரணம் ஒன்றையும் கூறியுள்ளார் அவர்.
நியாயமான காரணம்
தோனி ஐந்தாம் இடத்தில் ஆடுவதன் மூலம் அனுபவ பேட்ஸ்மேன்கள் பேட்டிங் வரிசை முழுவதும் தகுந்த இடைவெளிகளில் இருப்பார்கள் என கூறி உள்ளார். அதாவது, தற்போது அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, தவான், கோலி வரிசையாக முதல் மூன்று இடங்களில் களமிறங்குவார்கள்.
நம்பிக்கை
எனவே, தோனி ஐந்தாம் இடத்தில் இறங்கினால், 4, 6 ஆகிய இடங்களில் இறங்கும் அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை அளிப்பது போல இருக்கும் என்கிறார். இது மட்டுமல்ல, தோனி எப்படி ஆடுவார் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
பினிஷிங்
தோனி ஐந்தாம் இடத்தில் இறங்கினால், போட்டியின் கடைசி வரை செல்வதுடன், தேவைப்பட்டால் அதிரடியாகவும் ஆடுவார் என தோனியின் பினிஷிங் திறனை கோடிட்டு காட்டியுள்ளார் சச்சின். இவரது கருத்து, அனில் கும்ப்ளேவின் யோசனைக்கு நேர்மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சச்சின் தான் சரி
அனில் கும்ப்ளே வரிசையாக நான்கு அனுபவ பேட்ஸ்மேன்களை ஆடவைக்க வேண்டும் என கூறினார். ஆனால், சச்சின் அனுபவ வீரர்கள் பேட்டிங் வரிசையில் முடிந்த வரை தகுந்த இடைவெளிகளில் இருக்க வேண்டும் என்கிறார். சச்சின் சொல்வது தான் சரியான யோசனையாக உள்ளது.