ஜாதவ் ஏன் சரியில்லை?
கேதார் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் நான்கு போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்றார். பாகிஸ்தான் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர், அதிரடியாக ஆட முயலாமல், ஒரு பந்துக்கு ஒரு ரன் என எடுத்து 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அரைசதம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார் ஜாதவ், எனினும், அந்த அரைசதத்தை அவர் எட்டிய விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஏராளமான டாட் பால்கள், ஆடி கடைசி நேரத்தில் அரைசதத்தை கடக்கவும் நிறைய பந்துகளை எடுத்துக் கொண்டார்.
வாய்ப்பு கடினம்
வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் தோனிக்கு முன்பே பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த காரணங்களால், ஜாதவ்வுக்கு அணியில் இனி இடம் கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.
ஏன் மாற்றம் தேவை?
மேலும், ஜாதவ்வை அடுத்த போட்டியில் மாற்ற முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரில் அடுத்த முக்கிய போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டி நடைபெற உள்ள பிர்மிங்காம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.
ஜாதவ்வை நம்பமுடியாது
ஜாதவ் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர் என்றாலும், உலகக்கோப்பை தொடரில் இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே கோலி அவரை பயன்படுத்தினார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என இரு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், பிர்மிங்காமில் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
மாற்று வீரர் யார்?
ஜாதவ்வை நம்ப முடியாத நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியின் வாய்ப்பு பெறலாம். மேலும், இந்த மாற்றத்தால் அணியின் சமநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, சுழற்பந்துவீச்சில் இந்தியா பலமடையும்.
ஏன் ஜடேஜா?
ஜடேஜா பேட்டிங்கில் கொஞ்சம் சராசரி என்றாலும், பந்துவீச்சில் கலக்குவார். கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற ஜடேஜா, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். அந்த அனுபவம் அவருக்கு தற்போது இங்கிலாந்து தொடரில் கை கொடுக்கக் கூடும். கேப்டன் விராட் கோலி இந்த முக்கிய மாற்றத்தை செய்ய அதிக வாய்ப்புள்ளது.