சுழற்சி முறை
முதல் பிரச்சனை வீரர்கள் சுழற்சி. தற்போதைய இந்திய அணியில் எந்த 11 வீரர்கள் உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்குவார்கள்? என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆறு வீரர்கள் தவிர, யாரையும் நாம் உறுதியாக அணியில் இடம் பெறுவார் என கூறிவிட முடியாது.
உலகக்கோப்பையிலும் உறுதி
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோலி, தோனி, பும்ரா, ஹர்திக் பண்டியா தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சுழற்சி முறையில் தான் பயன்படுத்தப்படுவார்கள் என்பது உறுதி. அப்படித்தான் இதுவரை ரவி சாஸ்திரி - கோலி கூட்டணி இந்திய அணியை வழிநடத்தி வந்துள்ளது.
மனதை பாதிக்கிறது
இப்படி அணியை மாற்றிக் கொண்டே இவர்கள் வெற்றியையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். அதே சமயம், பல வெல்ல வேண்டிய போட்டிகளில் தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இப்படி இருப்பது வீரர்களின் மனதை கடுமையாக பாதிக்கிறது என சில வீரர்களே பேட்டி அளித்து விட்டனர்.
மாற்றாத அணிகள்
ஐபிஎல் தொடரில் கூட அணியை அதிகமாக மாற்றாத சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அணியை அதிகமாக மாற்றி வந்த பஞ்சாப், பெங்களூர், ராஜஸ்தான் ஆகியோர் பிளே-ஆஃப்புக்கே முன்னேறவில்லை. ஆனால், இது ரவி சாஸ்திரி - கோலி கண்களுக்கு தெரியப் போவதில்லை.
இங்கிலாந்து மண்
அடுத்த பிரச்சனை, இங்கிலாந்து. இங்கிலாந்தில் கடைசியாக ஆடிய இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-2 என தோல்வி அடைந்தது. டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடியது. அதற்கு முன், சாம்பியன்ஸ் ட்ராபியில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி சராசரி அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடம் அப்போது தோல்வி அடைந்து இருந்தது.
திடீர் சறுக்கல்
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெற்றிகள் பெற முடியும். ஆனால், அது தொடர்ந்து நடக்காது. திடீரென்று சறுக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுவும் பலம் குறைந்த அணிகளிடம்! இதற்கு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி மட்டுமல்ல. ஆசிய கோப்பையும் ஒரு உதாரணம். இது மற்றொரு பிரச்சனை.
அதிர்ச்சி அளிக்கலாம்
ஆசிய கோப்பை தொடரில் கத்துக்குட்டி ஹாங்காங் மற்றும் வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்தியா தடுமாறியது. தோல்வி அடையாவிட்டாலும் இந்தியா அந்த அணிகளிடம் போராடிய விதம் அதிர்ச்சி அளித்தது. இது உலகக்கோப்பை தொடரிலும் நடக்கலாம்.
கத்துக்குட்டிகள் இல்லை
இந்த உலகக்கோப்பை கடந்த இரண்டு - மூன்று உலகக்கோப்பை தொடர்களைக் காட்டிலும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம், முன்பு போல 14 அல்லது 16 அணிகள் இந்த உலகக்கோப்பையில் இடம் பெறவில்லை. அப்படி அதிக அணிகள் இடம் பெற்றால், நமீபியா, கென்யா, கனடா, ஸ்காட்லாந்து போன்ற சில அணிகள் தோல்வி அடைவதற்கு என்றே வரும்.
கடினமான லீக் சுற்று
அது இப்போது நடக்காது. இந்த முறை சிறந்த பத்து அணிகள் மட்டுமே இடம் பெறும். அதுவும், லீக் சுற்றில் ஐபிஎல் போல மற்ற ஒன்பது அணிகளுடனும் இந்தியா மோதியே ஆக வேண்டும். அப்படிப் பார்த்தால், பலம் பொருந்திய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளைத் தாண்டி, திடீர் அதிர்ச்சி அளிக்கும் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளையும் இந்தியா சந்தித்தே ஆக வேண்டும்.
கேப்டன்சி
கோலியின் கேப்டன்சி குறித்து ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளது. உலகக்கோப்பை போன்ற அழுத்தம் நிறைந்த தொடர்களில் ஒரு கேப்டன் என்பவர் திட்டங்கள் போடுவதோடு, வீரர்களை ஒரு சகோதரர் போல, நம்பிக்கை அளித்து வழிநடத்திச்செல்ல வேண்டும்.
உதாரணம்
இதற்கு 2003 உலகக்கோப்பையில் கங்குலி, 2011 உலகக்கோப்பையில் தோனி ஆகியோர் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். இதெல்லாம் நம்ம கோலிக்கு வருமா? இதுவரை அவர் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து, சரியாக ஆடாவிட்டாலும், சில போட்டிகளில் வாய்ப்பளித்து நாம் பார்த்ததே இல்லை.
ஐபிஎல் களைப்பு
இதையெல்லாம் தாண்டி இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி களைத்துப் போய் சுற்றுலா சென்று இருக்கிறார்கள்!! இவர்கள் எப்போது தங்கள் ஐபிஎல் அணிகளை மறந்து, மனதளவில் ஒரே இந்திய அணியாக மாறி... அட போங்கப்பா!! உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு வாய்ப்பில்லைன்னு நினைச்சுப்போம்.. ஜெயிச்சா சந்தோஷம்!!