கடந்த காலம்
கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால், இந்தியா சின்ன அணிகளிடம் ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்பது புரியும். கொஞ்சம் அசால்ட்டாக இருந்தாலும், சின்ன அணிகளிடம் இந்தியா தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.
இலங்கைக்கு எதிராக..
கடந்த 1996இல் பெரிய எதிர்பார்ப்பின்றி உலகக்கோப்பை தொடருக்குள் நுழைந்த இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற அந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. அந்தப் போட்டியில் இலங்கை அணி 251 ரன்கள் குவித்தது.
படுமோசமான ஆட்டம்
ஆனால், சேஸிங்கில் இந்தியா கோட்டை விட 8 விக்கெட்கள் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக காட்சி அளித்தது. அந்தப் போட்டிக்கு சுமார் 1 லட்சம் இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கூடி இருந்தனர்.
எதிர்ப்பு
அவர்கள் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தை கண்டு பொங்கி எழுந்து பொருட்களை மைதானத்தில் வீசி எதிர்ப்பு தெரிவித்ததால், இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு மோசமாக ஆடியது இந்திய அணி. இது மட்டுமல்ல.. இன்னும் இருக்கு!
ஜிம்பாப்வே, வங்கதேசம்
1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது இந்தியா. அதே போல, 2007 உலகக்கோப்பையில் தங்கள் முதல் போட்டியில், வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது இந்திய அணி.
அசால்ட்
இந்த வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, இந்தியா சிறிய அணிகள் என "அசால்ட்"டாக, பெரிய திட்டம் இல்லாமல் ஆடியது தான் தோல்விகளுக்கு காரணம் என்பது புரியும். தற்போதுள்ள இந்திய அணியும் இது போன்ற தவறுகளை கடந்த ஆண்டில் சர்வ சாதாரணமாக செய்து வந்துள்ளது.
தடுமாற்றம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் தோல்வி, ஒரு போட்டியில் டை செய்து அதிர்ச்சி அளித்தது. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரீரு அனுபவ வீரர்களே இருந்தனர். பலர் 50 போட்டிகள் கூட ஆடி இராத இளம் வீரர்கள்.
ஆசிய கோப்பையில்…
ஆசிய கோப்பை தொடரில் கத்துக்குட்டி ஹாங்காங் அணி, வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தியா போராடிய காட்சி இன்னும் மனதில் இருக்கிறது. இதே போன்ற நிலை, உலகக்கோப்பை தொடரிலும் ஏற்படலாம்.
சிறிய அணிகள்
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மட்டுமல்லாமல், மற்ற பலமான அணிகளையும் மிரட்டக் காத்திருக்கின்றன ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பலம் குறைந்த அணிகள். இந்த நான்கு அணிகளிடமும் இந்தியா அசால்ட்டாக ஆடினால், அது தொடரில் பெரும் பின்னடைவை அளிக்கும்.