ரசிகர்களின் கேள்வி
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்கி ஒன்றரை மாதகாலம் நடைபெற உள்ளது. இந்த நீண்ட, அதிக அழுத்தம் நிறைந்த முக்கிய தொடரில் ஆடும் அளவுக்கு இந்திய அணி வீரர்களின் உடல் மற்றும் மனம் போதிய ஓய்வு பெற்றுள்ளதா? என்பதே ரசிகர்களின் கேள்வி.
பார்ம் இழந்த வீரர்கள்
உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ள இந்திய அணி வீரர்கள் 15 பேரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர். சிலர் ஐபிஎல் தொடரில் தங்கள் பார்மை மீட்டனர். சிலர் தங்கள் பார்மை இழந்தனர். ஆனால், இதை விட முக்கிய பிரச்சனை ஒன்று உள்ளது.
வீரர்களுக்கு சோர்வு
பார்ம் இழந்த வீரர்கள் குறித்த கவலையை விட, இந்திய வீரர்கள் இடைவிடாமல் கிரிக்கெட் ஆடி வருவது உலகக்கோப்பை தொடரில் பிரதிபலிக்கும் என கூறுகின்றனர் சிலர். உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வு என்பது நல்ல பார்மில் உள்ள வீரரையும் நம்பிக்கை இழக்க வைக்கும்.
இடைவிடாத கிரிக்கெட்
இந்திய அணி கடந்த 2018 மத்தியில் கிரிக்கெட் ஆடத் துவங்கி, தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று, இறுதியாக மார்ச் இறுதி முதல், மே மாதம் வரை ஐபிஎல் தொடரில் பங்கேற்று உள்ளது. எனினும், இந்த ஒரு வருட காலத்தில் இந்திய அணி வீரர்கள் தனித் தனியாக சில மாத காலம் ஓய்வு எடுத்துள்ளனர்.
உடலுக்கு மட்டுமே ஓய்வு
ஆனால், இந்த ஓய்வு என்பது உடலுக்கு மட்டுமே. மனதளவில் பல வீரர்கள் அணியில் தங்கள் இடம் நிரந்தரமா என்ற கேள்வியுடனேயே தங்கள் ஓய்வை கழித்துள்ளனர். அப்படி அணியில் நிரந்தர இடம் உண்டா என கடந்த ஒரு வருடத்தில் நிலை தடுமாறிய வீரர்கள் - தவான், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ராகுல், புவனேஸ்வர் குமார், ஜடேஜா, முகமது ஷமி, சாஹல், விஜய் ஷங்கர், ஹர்திக் பண்டியா.
குறைந்த இடைவெளி
இப்படி மனதளவில் சோர்ந்து இருந்த இவர்கள், உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தாலும், அடுத்து ஒன்றரை மாத ஐபிஎல் தொடரின் தாக்கத்தோடு, குறைந்த இடைவெளியில் உலகக்கோப்பை தொடருக்கு தயாராக வேண்டும்.
காயம்
ஐபிஎல் தொடரில் சில முக்கிய வீரர்கள் பாதிக்கப்பட்டனர். கேதார் ஜாதவ் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். தோனிக்கு முதுகுப் பிடிப்பு உள்ளது. ஜடேஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அதில் இருந்து மீண்டார். ரோஹித் சர்மா, பும்ரா காயமடைந்து பின் மீண்டனர்.
ஒரே அணியாக..
இதையும் தாண்டி, ஐபிஎல் அணிகளில் பல்வேறு வீரர்களோடு ஒரே அணியாக இருந்த இவர்கள், தற்போது இந்திய அணி என்ற அடையாளத்துக்குள், ஒரே அணியாக சிந்திக்க வேண்டும். இதற்கு இருக்கும் அவகாசம் இரண்டு வாரங்கள் மட்டுமே.
மற்ற அணிகளுக்கு..
இதையெல்லாம் சுட்டிக் காட்டும் ரசிகர்கள், இதை எல்லாம் மீறி இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும். மற்ற அணிகளுக்கு இந்த பிரச்சனை இல்லை. அந்த அணிகளின் ஒரு சில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் ஆடினார்கள்.
உலகக்கோப்பை வாய்ப்பு?
அதனால், அந்த அணிகள் இந்தியாவைக் காட்டிலும், உலகக்கோப்பை தொடரில் ஒரு அடி முன்னே இருக்கும். அது இந்தியாவை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. பணத்தைக் கொட்டும் ஐபிஎல் தொடரால், இந்தியா உலகக்கோப்பையில் சொதப்பப் போகிறதா?