முதல் போட்டி
1975இல் முதல் உலகக்கோப்பை தொடரின், முதல் போட்டி. இங்கிலாந்து அணியை சந்தித்தது இந்திய அணி. 60 ஓவர் போட்டிகளாக நடந்த அப்போதைய ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 60 ஓவர்களில் 334 ரன்கள் குவித்தது.
அன்று ஆடிய ஆட்டம்
அடுத்து இந்தியா சேஸிங் செய்ய வேண்டும். துவக்க வீரர் சுனில் கவாஸ்கர் அன்று ஆடிய விதம் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு இன்னிங்க்ஸ். 335 என்ற பெரிய இலக்கை நோக்கி ஆடிய போது, கவாஸ்கர் 174 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இந்தியா படுதோல்வி
அந்தப் போட்டியில் இந்திய அணி 60 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இன்று வரை கிண்டலுக்கு உள்ளாகும் இந்த இன்னிங்க்ஸ்-ஐ கவாஸ்கர் ஏன் ஆடினார் என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
காரணம் என்ன?
அன்றைய காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் எப்படி ஆடுவது என்பது குறித்த பெரிய திட்டம் இல்லை எனவும், அணிக்குள் மனக்கசப்புகள் இருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தப் போட்டி முடிந்த உடன் இந்திய அணி மேலாளர் ராம்சந்த் இது சுயநலமான ஆட்டம் என கோபமடைந்ததற்கான சான்றுகள் உள்ளது.
கவாஸ்கர் உச்சகட்டம்
கவாஸ்கர் தனது ஆட்டம் குறித்து பிற்காலத்தில் பேசியது தான் உச்சகட்டம். தான் ஆடிய இரண்டாவது பந்திலேயே எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டதாகவும், ஆனால் யாரும் அவுட் கேட்காததால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஒருவேளை தான் அந்த பந்திலேயே கேட்ச்சை குறிப்பிட்டு வெளியேறி இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.
வெற்றி தான் முக்கியம்
எது எப்படியோ, அணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். இந்த படிப்பினை முதல் உலகக்கோப்பை தொடரின், முதல் போட்டியில் கிடைத்தது தான் ஆச்சரியம்.