லண்டன் : 2019 உலகக்கோப்பைக்கு அணிகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருக்க, முன்னாள் வீரர்கள் பலரும் கமண்டரி, தொலைக்காட்சி விவாதம் என படுபிஸியாக இருக்கின்றனர்.
உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சந்தித்துக் கொண்ட போது புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சேவாக்.
அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் 2003 உலகக்கோப்பை நினைவுகளில் மூழ்கினர். அப்போது கங்குலி தலைமையில் யாருமே எதிர்பாராத வகையில் உலகக்கோப்பை தொடரில் இந்தியா கலக்கல் ஆட்டம் ஆடியது.
1983, 2011 உலகக்கோப்பை வெற்றிகளுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த உலகக்கோப்பை என்றால் அது 2003 தான். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் இந்தியா சரியாக விளையாடவில்லை.
Reunion ! pic.twitter.com/EbHDmsh54j
— Virender Sehwag (@virendersehwag) May 28, 2019
அதன்பின் சுதாரித்த இந்திய அணி வெற்றி மேல் வெற்றிகளாக குவித்து இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அப்போதைய அணியில் சேவாக் துவக்க வீரராகவும், கங்குலி மூன்றாம் இடத்திலும் பேட்டிங்கில் களமிறங்கினர். ஹர்பஜன் சிங் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
கங்குலி ரசிகர்களை கேட்டால், 1983, 2011 உலகக்கோப்பை தொடரை விட 2003 உலகக்கோப்பை தான் இந்தியாவின் சிறந்த உலகக்கோப்பை தொடர் என்பார்கள். அப்போது போல இந்த முறையும் இந்திய அணி சிறப்பாக ஆடுமா?