பறந்த சிக்ஸர்கள்
ஆம்! நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். மும்பை பந்துவீச்சில், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஸ்பின்னர் ராகு சாஹர் ஓவர்களில் சிக்ஸர்கள் பறந்தன. பெங்களூரு அணியின் ஸ்ரீகர் பரத், ராகுல் ஓவரை வெளுத்து வாங்கினார். எனினும், இறுதிக்கட்டத்தில் கொஞ்சம் இழுத்துப் பிடித்த ராகுல், 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். அவரது பவுலிங் எகானமி 8.20.
பாண்ட்யா சொதப்பல்
இதன் பிறகு 166 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் ஷர்மா - டி காக் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. எனினும், ரோஹித் 43 ரன்களும், டி காக் 24 ரன்களும் எடுத்து அவுட்டான பிறகு, ஒட்டுமொத்த மும்பை அணியின் பேட்டிங்கும் கொலாப்ஸ் ஆனது. அதன் பிறகு ஒருவர் கூட இரட்டை இலக்கை எட்டவில்லை. இஷான் கிஷன் 9, சூர்யகுமார் யாதவ் 8, க்ருனால் பாண்ட்யா 5 என்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இந்த இக்கட்டான சூழலில் பந்து வீசிய ஹர்ஷல் படேல், 16.1, 16.2, 16.3 என்று வரிசையாக மூன்று பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர் என்று ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணியின் தோல்வியை உறுதி செய்தார். ஹர்திக் பாண்ட்யா 3 ரன்களில் அவுட்டானார். மும்பை 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Recommended Video
இஷான், சூர்யகுமார்
இங்கு மும்பை தோற்றதாலோ, பெங்களூரு ஜெயித்ததாலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது தான் இந்திய அணி நிர்வாகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது பேட்டிங்கை பார்த்து பிசிசிஐ கலங்கிப் போயுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஷிகர் தவான் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இடது கை பேட்ஸ்மேன் தான் இஷான் கிஷன். ஆனால், ஐபிஎல் 2ம் கட்ட தொடரில், அவர் ஒரு போட்டியில் கூட முழுதாக 15 ரன்களை தாண்டவில்லை. தவான் நீக்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய விலை இஷான் கிஷன். ஆனால், ஒரு சிக்ஸ் அடிக்கக் கூட தடுமாறும் இவரது பேட்டிங் நிலையையைப் பார்த்து ஆடிப் போயிருக்கிறது இந்திய அணி.
3 ரன்களைக் கூட
அடுத்து சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ்-ஃபேக்டர் வீரர் இவர் தான் என்று மெச்சாத ஆளில்லை. ஆனால், இவர் 10 ரன்களை தாண்டுவதற்கே இந்த தொடரில் சிரமப்படுகிறார். இவரது பேட்டிங் சொதப்பல், இந்திய அணியின் டி20 ஸ்டிராடஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கேப்டன் கோலி இவர் தான் மிகப்பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அடுத்து.. ஹர்திக் பாண்ட்யா. இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில், முதல் 2 போட்டிகளில் ஹர்திக் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. அவர் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான காரணம் இதுவரை இல்லை. ஆனால், அவருக்கு காயம் இருப்பது மட்டும் தெரியவந்தது. இந்த சூழலில் தான், நேற்றைய போட்டியில் அவர் களமிறங்கினார். 3 ரன்களைக் கூட அவர் தாண்டவில்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல...இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த போதும் கூட, இந்திய அணியில் அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
அணியில் மாற்றமா?
இதுமட்டுமின்றி, இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த யுவேந்திர சாஹல் நேற்று, மும்பை அணியை படுத்தி எடுத்துவிட்டார். 4 ஓவர்கள் வீசிய சாஹல், மும்பை அணியின் டி காக், இஷான் கிஷன் பும்ரா என 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேசமயம் அணியில் சேர்க்கப்பட்டிருந்த ராகுல் சாஹர் 33 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த அனைத்து ஃபேக்டர்களும் இந்திய அணி நிர்வாகத்தை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. பலரும், இந்திய டி20 அணித் தேர்வில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று கூறிவருகின்றனர். குறிப்பாக, அபார ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவானை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், பிசிசிஐ தரப்பில், தேர்வு செய்யப்பட்ட அணியில் எந்த மாற்றமும் இனி இருக்காது என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. வீரர்கள் காயத்தில் சிக்கினால் மட்டுமே அணியில் ரீபிளேஸ்மென்ட் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.