மிர்பூர்: இந்தியாவுக்காக மீண்டும் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் துணை கேப்டன் விராத் கோஹ்லி.
அவரது ஆட்டம்தான் இந்தியாவின் கெளரவத்தை இன்று ஓரளவுக்கு காப்பாற்றியது.
இன்றைய இறுதிப் போட்டியில் அவர் தனது 4வது அரை சதத்தை விளாசினார். களத்தில் இறங்கியது முதலே பிரில்லியன்ட்டாக ஆட ஆரம்பித்த கோஹ்லி, 50 ரன்களை கஷ்டமே இல்லாமல் தொட்டார். இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு ஆட்டம் காட்டிய கோஹ்லி 43 ரன்களில் 50 ரன்களைத் தொட்டார்.
கோஹ்லியின் ஆட்டத்தால் 16வது ஓவரில் இந்தியா 100 ரன்களைத் தாண்டியது. 2வது ஓவரில் ரஹானே அவுட்டாகிப் போன பின்னர் வந்த கோஹ்லி எடுத்த எடுப்பிலிருந்தே அதிரடியாக ஆடினார். அவரும் ரோஹித் சர்மாவும் இணைந்து பிரமாதமாக ஆடி 60 ரன்களைச் சேர்த்தனர். இன்று கோஹ்லி போட்டது இந்தத் தொடரில் 4வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசிப் பந்து வரை சிறப்பாக ஆடிய கோஹ்லி, கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். 58 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி எடுத்தது 77 ரன்களாகும்.