அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2019 முதல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதும் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் -வங்கதேச தொடர் ரத்து
இந்த தொடரில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒயிட்வாஷ் ஆன போதிலும் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் ரத்தாகியுள்ளன. பாகிஸ்தான் -வங்கதேசத்திற்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ரத்தாகியுள்ளது.
மிஸ்பா உல் ஹக் கோரிக்கை
இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நேர்மையான முறையில் நடத்த வேண்டுமென்றால் அதன் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் மிஸ்பா உல் ஹக் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதை தாண்டி அதன் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று மிஸ்பா கூறியுள்ளார்.
போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும்
ரத்து செய்யப்பட்டுள்ள போட்டிகளுக்கு புள்ளிகளை வழங்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அணிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், இந்த தொடரின் முடிவுகள் சரியாக இருக்காது என்றும் மிஸ்பா கூறியுள்ளார். இதையடுத்து இந்த தொடர் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், ரத்து செய்யப்பட்ட போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் மிஸ்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
பயிற்சி எடுக்க வீரர்களுக்கு அறிவுறுத்தல்
வங்கதேசத்திற்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளை அடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப் போனாலும், இங்கிலாந்து வீரர்களின் சாதக பாதகங்களை ஆராய்ந்து பயிற்சி எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் மிஸ்பா கூறியுள்ளார்.