மிர்பூர்: டுவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. கூடவே மோசமான பீல்டிங்கும் சேர்ந்ததால் 2வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது இந்தியா.
விராத் கோஹ்லியைத் தவிர மற்றவர்கள் அதிரடியாக ஆட மறந்ததால், இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
கடைசி வரை சிறப்பாக ஆடிய கோஹ்லி, கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆகி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டார்.
இந்தியா தனது 2வது ஓவரிலேயே ரஹானேவை இழந்தது. அவரது பங்கு 3 ரன்கள் மட்டுமே.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கோஹ்லியும், ரோஹித் சர்மாவும் சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 60 ரன்களைக் குவித்து வலிமைப்படுத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரோஹித் சர்மா 11வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 29 ஆகும்.
அதன் பின்னர் வந்த யுவராஜ் சிங்தான் ரசிகர்களை வெகுவாக கடுப்பேற்றி விட்டார். என்ன செய்கிறார் என்றே புரியவில்லை. அப்படி ஒரு சொதப்பல் ஆட்டம். கடைசி வரை அவரால் நிலையாக இருக்கவே முடியவில்லை. இறுதியில் 21 பந்துகளைச் சந்திதது 11 ரன்களில் ஆட்டமிழந்தார் யுவராஜ் சிங்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டோணியும், கோஹ்லியும் சேர்ந்து நிலைப்படுத்த முயன்றும், இலங்கை பந்து வீச்சு திடீரென வலுவாகி விட்டதால் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
மேலும் கடைசி ஓவரில் இந்தியாவால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் போனது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தட்டுத் தடுமாறிய இந்தியா கடைசி பந்தில் கோஹ்லியை ரன் அவுட்டுக்கு இழந்தது.
இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 130 ரன்களை எடுத்தது.
இலங்கைத் தரப்பில் குலசேகரா, மாத்யூஸ் மற்றும் ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
முன்னதாக இலங்கை அணி டாஸ் வென்று இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழை நின்று ஆடுகளம் விளையாடத் தயார் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டாஸ் போடப்பட்டது. இதில் இலங்கை கேப்டன் லசித் மலிங்கா டாஸ் வென்றார்.