166 பேர் உயிரிழந்த சம்பவம்
மும்பையின் தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடல் மார்க்கமாக பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
12வது ஆண்டு நினைவுதினம்
நன்கு நாட்கள் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வின் 12வது ஆண்டு நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது அஞ்சலியை சமூக வலைதளங்கள் மூலம் செலுத்தினர்.
வடுக்கள் மறையாது
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பதிவில் காயங்கள் ஆறலாம், ஆனால் அது கொடுத்த வடுக்கள் மறையாது என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் உயிரிழப்புகள் நெருக்கடி நேரங்களை எதிர்கொள்ள உறுதுணையாக எப்போதும் நினைவில் வைக்க வேண்டியவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களை காத்த வீரர்கள்
இதேபோல கேப்டன் விராட் கோலியும் தன்னுடைய இரங்கலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 26/11 தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்கள், அந்த தாக்குதலில் பலரது உயிர்களை பாதுகாத்த வீரர்கள் எப்போதும் எங்களது நினைவுகளில் நீங்காமல் இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஜிங்க்யா ரஹானே அஞ்சலி
முன்னாள் துவக்க ஆட்டக்காரர் மற்றும் பாஜக எம்பி கவுதம் கம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில் 26/11 தினத்தை எப்போதும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய இறையாண்மை மீறப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேபோல அஜிங்க்யா ரஹானேவும் அந்த தாக்குதலில் பொதுமக்களை காத்த வீரர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துள்ளார்.