சென்னை : இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்தவர் நிஷா தஹியா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை கூட U 23 சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
இந்நிலையில் அவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியாவும் அவரது சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் ஹரியானா மாநிலம் சோனேபட் ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் அகாடமியில் பயிற்சிகாக சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மூவரின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும், அதில் நிஷா தஹியா மற்றும் அவரது சகோதரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தகவலுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார் நிஷா தஹியா. இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் சுட்டுக்கொலை செய்யப்பட்டுவிட்டேன் என பரவு தகவல் முற்றிலும் பொய்யானது. நான் தற்போது சீனியர் தேசிய அளவிலான தொடருக்காக கோண்டாவில் பயிற்சி பெற்று வருகிறேன். நன்றாக உள்ளேன் எனக்கூறியுள்ளார்.
ஏன் திடீரென நிஷா தஹியா குறித்து இப்படி ஒரு பொய்யான தகவல் பரவியது, நிஷாவுக்கு எதிராக சதித்திட்டம் செய்தது யார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொல்ல நடத்தப்பட்ட திட்டம் தான் தற்போது கசிந்து முன்கூட்டியே தெரியவந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.