பயிற்சி
மிகப்பெரும் சர்வதேச போட்டிகள் நடைபெறும் போது, அதற்கு தயாராகும் விதமாக அணிகள் தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து 'இண்ட்ரா ஸ்குவாட்' விளையாடுவார்கள். அந்த வகையில் விராட் கோலி தலைமையில் ஒரு அணியும் கே.எல்.ராகுல் தலைமையில் இன்னொரு அணியும் பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிரடி சதம்
முதல் நாள் போட்டியை போன்றே 2வது நாள் ஆட்டத்திலும் ரிஷப் பண்ட் அதிரடியை தொடர்ந்துள்ளார். அஸ்வின், இஷாந்த் சர்மா என அனைத்து பவுலர்களின் ஓவர்களையும் தெறிக்கவிட்ட பண்ட், 94 பந்துகளில் 121 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதே போல ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் 135 பந்துகளில் 85 ரன்களை விளாசியுள்ளார். கில்லின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருந்த நிலையில அவரின் அட்டகாசமான ஆட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இதே போல ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
பவுலிங்
பந்துவீச்சை பொறுத்தவரை சீனியர் வீரர் இஷாந்த் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார். 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் இஷாந்த் சர்மா 36 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்துள்ளார். அதே போல ஆவேஷ் கானின் பந்துவீச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. புஜாராவுக்கு எதிராக அவர் வீசிய நிறைய பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு மிக நெருக்கமாக சென்றது.
விராட் கோலி பவுலிங்
இதில் மற்றொரு சுவாரஸ்யம் நடந்துள்ளது. கேப்டன் விராட் கோலியும் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எதிரணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது அவருக்கு எதிராக விராட் கோலி பந்துவீசினார். இதுகுறித்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.