அதிக பலம்
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா - நியூசிலாந்து இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த போட்டியில் நியூசிலாந்து அதிக பலத்துடன் இருக்கும் என முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் கூறியுள்ளனர்.
இந்திய அணிக்கு சிரமம்
இங்கிலாந்து களமானது கிட்டத்தட்ட நியூசிலாந்தில் இருப்பதை போன்றே தான் இருக்கும். எனவே பேட்ஸ்மேன்கள் நன்கு பழக்கப்பட்டிருப்பார்கள். அதே போல பவுலிங்கில் டிம் சவுத்தி, போல்ட், கெயில் ஜேமிசன் என அச்சுறுத்தும் படையை வைத்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் மேலாக இந்திய அணிக்கு முன்னதாகவே இங்கிலாந்து வந்து அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து விளையாடியுள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்த கடும் சிரமமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
நியூசிலாந்தின் பலவீனம்
இந்நிலையில் நியூசிலாந்தை வீழ்த்துவதற்கான முக்கிய ஆயுதத்தை முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு பலவீனம் உள்ளது. கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டியில் முதலில் சரிவை சந்தித்தால் அதில் இருந்து அவர்களால் மீளவே முடியவில்லை. அவர்கள் வென்ற டெஸ்ட் போட்டி அனைத்தும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வென்றதாகும். போட்டியின் தொடக்கத்திலேயே கடும் பிரஷர் அவர்களுக்கு ஏற்பட்டால் அதில் இருந்து அவர்கள் மீண்டு வெற்றி பெற்றதில்லை.
அட்வைஸ்
ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என 2 தொடர்களிலும் முதலில் தோல்வியை சந்தித்தது. பின்னர் கடும் பதிலடி கொடுத்து மீண்டது. எனவே நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி மட்டும் செய்துவிட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது எனத்தெரிவித்துள்ளார்.