தவிர்க்கமுடியாத வீரர்
இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத ஸ்பின்னராக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்ந்து வருகிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதே இதற்கு உதாரணம். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான களமாகும். ஆனால் அங்கு அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கியுள்ளது இந்திய அணி. ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய வில்லனாக அவர் திகழ்வதுதான்.
சாதனை பட்டியல்
சர்வதேச அளவில் 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 410 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதில் 208 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மேன்களுடையது. 30 முறை 5 விக்கெட்டுகளையும் , 7 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக திகழ்கிறார்.
மேலும், இந்திய அணியில் கபில்தேவ் (619), அனில் கும்ப்ளே (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோரை தொடர்ந்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய 4ஆவது பவுலராக அவர் இருக்கிறார்.
அஸ்வினின் அனுபவம்
இந்நிலையில் தனது அனுபவம் குறித்து பேசியுள்ள அஸ்வின், வீரர்கள் அனைத்து நேரங்களிலும் சிறப்பாகச் செயல்பட முடியாது. சில நேரங்களில் சொதப்பும் நிலை ஏற்படும். நானும் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளேன். எனக்கு அது மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஏனென்றால் அவற்றால் தான் நான் இன்று சிறப்பாக இருக்கிறேன்.
எப்போது ஓய்வு?
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அவரிடம் நீங்கள் எப்போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவீர்கள் என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அஸ்வின், நான் எப்போது எனது ஆட்டம் சிறப்பாக இல்லை, மேம்படுத்த முடியவில்லை என நினைக்கிறேனோ, அப்போது நான் எனது ஓய்வை அறிவித்துவிடுவேன். தற்போது நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். எனவே அதைப்பற்றி யோசிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.