பிசிசிஐ-ன் முடிவு
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பொறுத்தவரையில் அனைவரும் எதிர்பார்த்த முடிவே வந்திருந்தாலும், பவுலிங்கில் பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது. இங்கிலாந்து பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அங்கு பந்தில் நல்ல வேகமும், நல்ல ஸ்விங்கும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்திய அணியோ 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்கள் என களமிறக்குகிறது.
வானிலை நிலவரம்
சவுத்தாம்டன் நகரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் 5 நாட்களும் வானத்தில் கருமேகம் சூழ்ந்திருக்கும் எனவும், அவ்வப்போது மழை பொழிவு ஏற்பட்டு ஆட்டம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பின் படி ஒருவேளை மழை பெய்தால் பிட்ச்-ல் ஈரப்பதமாகி பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கைக்கொடுக்காது.
பிசிசிஐ எடுத்த ரிஸ்க்
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் விக்கெட் எடுக்க வேண்டும் என்றால் ஓரளவிற்கு வெயில் அடித்து பிட்ச் நன்கு வறண்டு காணப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் விக்கெட் எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனினும் வானிலை கணிப்பையும் மீறி அஸ்வின், ஜடேஜாவை நம்பி பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது.
ஏன் ஸ்பின்னர்கள் தேவை
அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 200 முறைக்கு மேல் இடதுகை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுத்த ஒரே ஒரு வீரராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அஸ்வின் உதவுவார் எனக்கூறப்படுகிறது. அதே போல ஜடேஜா பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கு உதவுவார் என்ற காரணத்தால் சேர்க்கப்பட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக அவரின் பேட்டிங் சராசரி 57 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.