தடுப்பாட்டம்
இந்திய டெஸ்ட் அணியில் சட்டீஸ்வர் புஜாரா நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியில் தனது நிதான ஆட்டம் மூலம் எதிரணி பவுலர்களை மிகவும் சோதித்து பார்க்கக்கூடியவர். இதன் காரணமாக இவரது ஸ்ட்ரைக் ரேட் பெரும்பாலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும். ரசிகர்கள் பலரும் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது சலிப்படைந்து விடுகின்றனர்.
ஸ்ட்ரைக் ரேட் முக்கியமில்லை
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இவர் பெரும்பாலான நேரங்களில் தடுப்பாட்டத்தில் மட்டுமே செய்தார். இதனால், அணியின் ஸ்கோர் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதனால், வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலாவது புஜாரா கொஞ்சமாவது அடித்து ஆட வேண்டும். தடுப்பாட்டத்தில் ஈடுபட்டால் ஸ்கோர் வருவது கஷ்டம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முட்டாள் தனமானது
இந்நிலையில் விமர்சனங்களுக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து பேட்ஸ்மேனை மதிப்பிடுவது என்பது முட்டாள் தனமான ஒன்று. எதற்காக ஸ்ட்ரைக் ரேட் குறித்து கவலைப்படுகிறீர்கள். ஒரு வீரர், தான் விரும்பும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட விடுங்கள். இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரும் வரையில் அவர் நிலைத்து விளையாடுவார்.
ஸ்ட்ரைக் ரேட் முக்கியமிலை
புஜாரா குறித்து பேசும் போது ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். கடைசியாக நடைபெற்ற தொடர்களை எடுத்துக்கொண்டால், இந்திய அணியே 200 ரன்களை கடக்க சிரமப்பட்ட போது புஜாரா மட்டும் 100 ரன்களை அடிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்கலாம். கடினமான பிட்ச்-களில் நம்பர்களை வைத்து வீரரை எடை போடக்கூடாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்டை எடுத்துக்கொண்டால், அதில் இந்திய அணிக்காக தடுப்பாட்டம் ஆடி பல அடிகளை புஜாரா உடலில் வாங்கிக்கொண்டார். அது பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியது. எனவே ரன்களை வைத்து பேட்ஸ்மேனை விமர்சிக்காதீர்கள் எனக்கூறியுள்ளார்.