6வது நாள் தொடக்கம்
இந்த டெஸ்ட் போட்டியில் மழை பாதிப்பு காரணமாக 2 நாட்கள் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் இன்று நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 32 ரன்கள் பின் தங்கி இருந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
கோலி திட்டம்
இன்றைய போட்டியில் 98 ஓவர்கள் முழுவதுமாக வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்து வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்து ஆடி வருகிறது. அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த பிறகு நியூசிலாந்து அணியை விரைவாக அவுட்டாக்க வேண்டும் என்பது தான் கோலியின் திட்டம் எனக்கூறப்படுகிறது.
கடினமான ஒன்று
ஆனால் ஒரே நாளில் 2 இன்னிங்ஸுகளை விளையாட வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சவுத்தாம்டன் களத்தில் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே இந்திய அணி ஒருவேளை நல்ல இலக்கை நிர்ணயித்தாலும் அரை நாளுக்கு உள்ளாக நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் எடுப்பது மிக கடினமான ஒன்றாகும். இந்நிலையில் இந்திய அணியின் முடிவுக்கு தினேஷ் கார்த்திக் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
தினேஷ் கார்த்திக் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி முதலில் வெற்றி அல்லது டிரா கண்டிப்பாக கிடைக்கும் என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு வெற்றியை நோக்கி தைரியமாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தலாம். தொடக்கத்திலேயே அதிரடியை காட்டி டாப் ஆர்டர் விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டால், பின்னர் ஆட்டத்தில் மீண்டு வருவதற்கு வாய்ப்புகளே கிடையாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.