கொட்டும் மழை
இங்கிலாந்து நாட்டின் வானிலை அறிக்கைப்படி சவுத்தாம்டனில் போட்டி நடைபெறும் 5 நாட்களும் கருமேகங்கள் சூழ்ந்து மழையின் குறுக்கீடு இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சவுத்தாம்டனில் நேற்று இரவு முதலே மழை விடாது பெய்து வருகிறது. இதனால் ஆட்டத்தின் முதல் செஷன் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் போடுவதும் தடைபட்டுள்ளது.
நெட்டிசன்கள் விமர்சனம்
இந்நிலையில் சவுத்தாம்டனில் பெய்து வரும் மழை காரணமாக இந்திய ரசிகர்கள் பெரும் பயமும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டி தான். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும், அப்போட்டியில் பெய்த மழைதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என இன்று வரை கூறப்பட்டு வருகிறது.
2019 உலகக்கோப்பை
கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பல ஆட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்டது. அதில் முக்கியமானது இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி. அந்தப் போட்டி தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாமதாக இரண்டு நாட்கள் விளையாடப்பட்டது.
இந்தியா தோல்வி
முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 239 ரன்களை எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் தடைப்பட, அடுத்த நாள் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதில் 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்த அணியை ரவீந்திர ஜடேஜா மீட்டார். ஆனால் 59 பந்துகளீல் அவர் அடித்த 77 ரன்கள் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
இந்திய ரசிகர்கள் அச்சம்
இதனை போலவே தற்போதும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உலகக்கோப்பை அரையிறுதியில் நடைபெற்றதை போலவே தற்போது நடைபெற்றுவிடுமோ என ரசிகர்கள் பயத்தில் உள்ளனர். மேலும் இதுபோன்ற மிக முக்கியமான போட்டிகளுக்கு ஐசிசி சரியான இடத்தை தேர்வு செய்யாதா என விமர்சித்து வருகின்றனர்.