மழைப்பொழிவு
ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியின் முதல் நாளிலேயே ஏமாற்றம் காத்திருந்தது. போட்டி நடைபெறும் சவுத்தாம்டனில் விடாது கொட்டிய மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் பின்னர் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் ஓரளவிற்கு நடைபெற்ற நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 217/10 ரன்களை மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
டிரா
ஏற்கனவே 2 நாட்களின் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால், ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் கண்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட ஓவர்கள் வீசப்படவுள்ளது. ஆனால் மீதமுள்ள 2 நாட்களில் 3 இன்னிங்ஸ்கள் ஆட வேண்டும் என்பதால் பெரும்பாலும் போட்டி சமனில் முடிவடைந்து, இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்படவே வாய்ப்புள்ளது.
கவாஸ்கர் அட்வைஸ்
இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றியாளரை முடிவு செய்வது குறித்து கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார். அதில் அவர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிராவில்தான் முடியும். எனவே கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதற்குமுன் ஐசிசி தொடரின் இறுதி முடிவு எட்டாமல் இருந்ததில்லை. இதுதான் முதல்முறை. இப்போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இரு அணிகளும் பேட்டிங்கில் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே போட்டி சரியாக முடிவடையும் எனக்கூறியுள்ளார்.
வாய்ப்பு மிக குறைவு
கால்பந்தாட்டத்தில் போட்டி டிராவில் முடிந்தால், பெனால்டி ஷாட் மூலம், வெற்றியாளர் முடிவு செய்யப்படும். டென்னிஸ் போட்டிகளிலும் அதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இல்லை. எனவே வெற்றியாளரை தீர்மானிக்க நிச்சயம் ஒரு ஃபார்முலா இருக்கும். ஐசிசி அதிகாரிகள் அது குறித்து ஆலோசிக்க வேண்டும். அந்த ஃபார்முலாவின் படி வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும்.