சோதித்த வானிலை
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் நாளிலேயே ஆப்பு வைத்தது வானிலை. விடாது கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது. பின்னர் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே ஒருவழியாக நடந்து முடிந்த நிலையில் 4ம் நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்பட்டது.
6வது நாள் ஆட்டம்
இதனால் விடுபட்ட ஓவர்களை வீச வேண்டும் என்பதற்காக ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் இன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் அதிக அளவிலான நேரங்கள் மழையினால் பாதிக்கப்பட்டதால் ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு குறைந்தது. இதனால் கடைசி நாள் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆட்டத்தில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்பதிலும், ஐசிசி திட்டவட்டமாக உள்ளது.
ஐசிசி
அதன்படி இன்றைய போட்டியில் 98 ஓவர்களையும் முழுவதுமாக கொடுக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி இரவு 11.30 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அனைத்து ஓவர்களும் வீசிய பிறகும் முடிவு எட்டப்படவில்லை என்றால் கூடுதல் ஓவர்கள் கொடுக்கப்படமாட்டாது. போட்டி சமனில் முடிவடைந்து இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.
ஸ்கோர்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 32 ரன்கள் முன்னிலையுடன் 249 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இந்திய அணி கடைசி நாளான இன்று தனது 2வது இன்னிங்ஸை முடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்திய அணிக்கு சாதகம்
தற்போது வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி வேகமாக ஸ்கோரை உயர்த்த முற்பட்டு வருகிறது. ஒருவேளை 250 ரன்களுக்கும் மேலாக இலக்கை நிர்ணயித்துவிட்டால், போட்டி இந்திய அணிக்கு சாதகமாக சென்றுவிடும். ஏனென்றால் பந்துவீச்சின் போது இந்திய அணிக்கு விக்கெட்டுகள் எடுக்க கூடுதல் நேரங்கள் கிடைக்கின்றன. மேலும் இலக்கை அடைய வேண்டும் என்ற பிரஷரில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆடுவார்கள் என்பதால், அடித்து ஆட நினைத்து அவுட்டாவார்கள்.