ஆட்டம் பாதிப்பு
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - நியூசிலாந்து போட்டி டாஸ் போடுவதற்கு முன்பாகவே மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் முதல் செஷன் வரையிலான ஆட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் உணவு இடைவெளி வரையிலான ஆட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
நின்றது மழை
மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி தொடங்குவது குறித்து ஐசிசி சார்பில் இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் சவுத்தாம்டனில் தற்போது சற்று மழை நின்றிருப்பதாகவும்,கடந்த 50 நிமிடங்களாக மழை பொழிவு இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மைதான ஊழியர்கள், மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின்னர் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அதிகாரிகள் குழு மைதானத்தை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் போட்டி நடைபெறலாம் என்று அறிவித்துவிட்டால் அடுத்த 30 நிமிடங்களில் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்ட நேரம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நாளொன்றுக்கு 6 மணி நேரம் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பார்த்தால் 3.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 4 மணி நேரம் தடைபட்டுள்ளது. தற்போது அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றால் கூட போட்டி 8 மணிக்கு தான் தொடங்கும். எனவே ஒன்றரை அல்லது 2 மணி நேரம் தான் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.