இந்திய அணி ஓப்பனிங்
இந்திய அணி சார்பில் ஓப்பனிங் களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடினர். கிடைக்கும் தருணங்களில் பவுண்டரிகளை விரட்டி வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. ரோகித் சர்மா 34 ரன்களுக்கும், சுப்மன் கில் 28 ரன்களுக்கும் அவுட்டாகினர். நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
2ம் நாள் முடிவு
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து மேல் சென்றுகொண்டிருக்கிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் ரன்கள்
இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எவ்வளவு ரன்கள் சேர்க்கும் என இந்திய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி 250 அல்லது அதற்கும் மேல் ரன்கள் அடிக்க நினைக்கிறோம். ஏனென்றால் இந்த களத்தில் 250 ரன்களே சிறந்த ஸ்கோராக இருக்கும். பந்து பழையது ஆகும் போது நல்ல ஸ்விங் கிடைக்கும். எனவே இனி ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்.
பேட்டிங் கோச் பாராட்டு
இந்திய ஓப்பனர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி நல்ல ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த தருணங்களில் ரன்களை அடித்துவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். இதனால் தான் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தனர். அதே போல விராட் கோலி - ரஹானே ஜோடி விளையாடி வரும் விதமும் பாராட்டுக்குரியது எனத்தெரிவித்துள்ளார்.