மழை குறுக்கீடு
இந்தியா - நியூசிலாந்து போட்டி நடைபெறும் சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று மதியம் 3 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் தற்போது வரை போடப்படவில்லை. மேலும் முதல் நாள் போட்டி உணவு இடைவெளி பகுதி வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்டன் பிட்ச்
சவுத்தாம்டனில் நல்ல மழை பெய்துள்ளதால் பிட்ச்-ல் ஈரப்பதம் ஏற்பட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக உள்ளது. ஈரப்பதம் இருந்தால், பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் எனக்கூறப்படுகிறது. ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் ஓரளவிற்கு வெயில் அடித்து பிட்ச் வறண்டு காணப்பட்டால் தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்திய ப்ளேயிங் 11
ஆனால் இந்திய அணியோ, தனது ப்ளேயிங் 11-ல் மூன்றே மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்து டாஸ் போடும் வரை தனது ப்ளேயிங் 11-ஐ சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. எனினும் அந்த அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று தான் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
கவாஸ்கர் அறிவுரை
இந்நிலையில் இந்திய அணி தனது ப்ளேயிங் 11ஐ மாற்ற வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நேற்றே இந்தியாவின் ப்ளேயிங் 11 அறிவிக்கப்பட்டாலும், டாஸ் போடும் வரை அதில் மாற்றம் செய்துகொள்ளலாம். அந்தவகையில் இந்தியா தனது ப்ளேயிங் 11-ல் கூடுதல் பேட்ஸ்மேனை இணைக்க வேண்டும். நான் கேப்டனாக இருந்த போது, ஸ்பின்னர் வேண்டுமா, பேட்ஸ்மேன் வேண்டுமா என்று குழப்பம் வரும். அப்போது எதிரணியின் ப்ளேயிங் 11-ஐ பார்த்து மாற்றிக்கொள்வேன். கோலியும் அப்படி செய்யலாம்.
என்ன மாற்றம்
என்னைப் பொறுத்தவரை இந்தியா அணி ஸ்பின்னருக்கு பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் சவுத்தாம்டன் களத்திற்கு பேட்ஸ்மேன்கள் அதிகம் தேவை. கூடுதல் பேட்ஸ்மேன் இருந்தால் உதவியாக இருக்கும் எனத்தெரிவித்துள்ளார். கவாஸ்கர் கூறியுள்ளபடி கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்க வேண்டும் என்றால், ஹனுமா விஹாரி முதல் தேர்வாக இருப்பார் எனக்கூறப்படுகிறது.