குறுக்கிட்ட மழை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சவுத்தாம்ப்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்கவிருந்தது. இந்திய வீரர்களின் 24 நாட்கள் கடுமையான குவாரண்டைனுக்கு செமத்தியான தீனியாக அமைந்தது இப்போட்டி. வீரர்களும், ரசிகர்களும் போட்டி தொடங்கும் ஜூன் 18ம் தேதிக்காக தினம் காத்திருந்தனர். தொடர்ச்சியாக அறைகளில் முடங்கியிருந்த இந்திய வீரர்களும், இப்போட்டியை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் தான் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை கலைத்திருக்கிறது.
ஆட்டம் ரத்து?
இந்த சூழலில், தான் தொடர் சாரல் மழை காரணமாக, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்பட மாட்டாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி, பலத்த மழை பெய்யவில்லை. ஆனால், தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. இது இப்படியே தொடரும் பட்சத்தில், இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம்.
சாரல் மழை
எனினும், தற்போது சவுத்தாம்ப்டனில் இரவு பெய்தது போல் கனமழை இல்லை. விடியற்காலையோடு கனமழை நின்றுவிட்டது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில், மழை முற்றிலும் நின்றிருந்தது. ஆனால், அவ்வப்போது தூறல்கள் இருந்தன. இந்த நிலையில் தான், காலை 8:30 மணிக்கு மேல் சாரல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நிற்காமல் பெய்கிறது
தற்போது, இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 நிலவரப்படி, சவுத்தாம்ப்டனில் கடுமையான மழை இல்லை என்றாலும், விடாமல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், போட்டியை தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இங்கிலாந்தின் வடிகால் சிஸ்டம் உலகத்தரம் வாய்ந்தது என்றாலும், சாரல் மழை நிற்காமல் பெய்வதால், போட்டியை தொடங்க முடியவில்லை.