திணறிய ஊழியர்கள்
சவுத்தாம்ப்டனில் போட்டி நடைபெறும் நாட்களில் மழை பெய்யும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் நாள் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை ஓய்ந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் துவங்கிவிடும். இதனால், மைதானத்தை க்ளீயர் செய்ய முடியாமல் ஊழியர்கள் திணறினர்.
பிறகு ஒருநாளே காலி
முதலில் உணவு இடைவேளை வரை ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், மதியத்திற்கு பிறகும் தொடர்ந்து மழை பெய்ததால், முதல் ஆட்டம் முற்றிலும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, வீரர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டமாவது நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
டாஸுக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி, இன்று (ஜூன்.19) இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி, நிச்சயம் நடைபெறும் என்று தெரிகிறது. ஏனெனில்,சவுத்தாம்ப்டனில் இன்று காலை நேரத்தில் வெயில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மேட்ச் உறுதி
அதேசமயம், மதியத்திற்கு பிறகு மழை பெய்ய 30 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலையில் இன்னும் கொஞ்சம் ஹெவியாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். ஸோ, காலையில் மேட்ச் நடந்தாலும், மதியத்திற்கு பிறகு போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எப்படி இருந்தாலும், இன்று சில ஓவர்களையாவது ரசிகர்கள் பார்ப்பது உறுதி என்றே தெரிகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முற்றிலும் தடைப்பட்டதால் இன்று அரை மணி நேரம் முன்பாகவே போட்டி தொடங்கவுள்ளது. இன்று மட்டுமல்ல, மீதமுள்ள நான்கு நாட்களுக்கும் போட்டி அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.