சிறப்பான தொடக்கம்
இதனையடுத்து இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பிட்ச்-ல் ஸ்விங் அதிகமாக இருந்த போதும் இருவரும் நிதானமாக விளையாடி 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 34 ரன்களுக்கு கெயில் ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்டானார்.
சுப்மன் கில்லுக்கு அடி
இந்நிலையில் மறுமுணையில் விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு முகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டத்தின் 17 ஓவரின் போது ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்தனர். அப்போது 50வது ரன்னை எடுக்க தயாராக இருந்த சுப்மன் கில்லுக்கு கெயில் ஜேமிசன் பவுன்சர் பந்தை வீசினார். ஜேமிசன் நல்ல உயரம் கொண்டவர் என்பதால் அந்த பந்தானது சுப்மன் கில்லின் ஹெல்மெட்டில் பட்டு ஒரு நிமிடம் கதிகலங்கி நின்றார்.
தொடர் அச்சுறுத்தல்
சுப்மன் கில்லின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து, அவரின் முகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியாத தெரிகிறது. ஏனென்றால் அந்த ஓவருக்கு பிறகும் சுப்மன் கில், தனது கண்ணில் ஏதோ பட்டிருப்பது போன்று சிரமப்பட்டு வந்தார். இது அவர் ஆட்டமிழப்பதற்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. சிறப்பாக விளையாடி வந்த அவர், வாக்னர் பந்துவீச்சில் அவுட்டானார்.
இந்திய அணி தடுமாற்றம்
போட்டி தொடங்கிய முதல் சில ஓவர்களுக்கு ஸ்விங் சற்று குறைவாக இருந்த நிலையில் 16வது ஓவருக்கு பிறகு நல்ல ஸ்விங் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் எடுக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தற்போது விராட் கோலி மற்றும் புஜாரா களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.