அதிக எதிர்பார்ப்பு
இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். ரோகித் சர்மா அனுபவ வீரராக இருந்தாலும், இங்கிலாந்து களத்தில் முதல் முறையாக டெஸ்ட் ஓப்பனிங் களமிறங்கியுள்ளார். இதே போல இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு இது இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டியாகும். அதுவும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரிலும் சுப்மன் கில் சரியாக விளையாடவில்லை. இதனால் இருவரும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
சிறப்பான தொடக்கம்
இந்நிலையில் இவர்கள் இருவருமே நியூசிலாந்தின் அசத்தல் பந்துவீச்சை மிக சாதூர்யமாக சமாளித்து வருகின்றனர். தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடிய இந்த ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தி வருகின்றனர். நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் சவுத்தி, போல்ட், கெயில் ஜேமிசன் ஆகியோரின் அச்சுறுத்தல்களுக்கு இடையிலேயும் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து விளையாடி வருகின்றனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு நல்ல நம்பிக்கையான தொடக்கம் கிடைத்துள்ளது.
பிட்ச் நிலைமை
சவுத்தாம்டனில் நல்ல மழை பெய்துள்ளதால் பிட்ச்சானது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் எனக்கூறப்பட்டது. அதுவும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் சுலபமாக இந்திய அணியை சுருட்டி விடுவார்கள் என அச்சுறுத்தப்பட்டது. ஆனால் பந்தில் நல்ல ஸ்விங் இருந்தாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் அதனை சிறப்பாக எதிர்கொண்டு வருகின்றனர். நேரம் போக போக பந்தில் இன்னும் ஸ்விங் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
ஜாஃபரின் கணிப்பு
முன்னதாக இந்திய அணிக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் அட்வைஸ் ஒன்றை கூறியிருந்தார். அதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். ஏனென்றால் கடந்த சில வருடங்களில் நியூசிலாந்து அணி தொடக்கத்தில் சரிவை சந்தித்தால் மீண்டு வந்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினாலோ, அல்லது எதிரணிக்கு சரிசமமாக சவால் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெறும். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் மீண்டு வந்துள்ளது எனக்கூறியிருந்தார். அவரின் கணிப்பு படி தற்போது நடந்து வருகிறது.