மழை குறுக்கீடு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்த சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் மழை பொழிய தொடங்கியது. இன்று மதியம் சற்று மழை பொழிவு நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர் மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
6வது நாள்
முதல் நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டிருந்தாலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 5 நாட்கள் முழுமையாக நடைபெறும். அதாவது, மீதமுள்ள 4 நாட்களிலும் கூடுதல் நேரங்கள் கொடுக்கப்பட்டு விளையாடப்படும். அப்படியும் 5 நாள் ஆட்ட நேரத்தை ஈடுகட்ட முடியவில்லை என்றால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாளை ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி கைவிடப்பட்ட ஆட்ட நேரங்களை 6வது நாளில் விளையாட ஏற்பாடு செய்யப்படும்.
போட்டி நேரம் மாற்றம்
இந்நிலையில் நாளை நடைபெறும் 2வது நாள் ஆட்ட நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து அணி போட்டுள்ள ட்வீட்டில், நாளைய போட்டி அரை மணி நேரம் முன்பாகவே தொடங்கும் என்றும், மொத்தம் 98 ஓவர்களாக வீசப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அப்படி பார்த்தால் இந்திய நேரப்படி போட்டி நாளை மதியம் 2.30 மணிக்கே தொடங்கிவிடும்.
நாளைய வானிலை என்ன?
சவுத்தாம்டனில் இன்று நல்ல மழை பெய்த நிலையில் நாளை போட்டி தொடங்குவதற்கு முன்பு சற்று மேகங்கள் விலகி நல்ல வானிலை நிலவும் எனக்கூறப்படுகிறது. எனினும் மதிய நேரங்களில் அவ்வபோது மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளைய ஆட்டமாவது தடைபட கூடாது என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.