2வது நாள்
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 2ம் நாள் ஆட்டமான நேற்று காலை முதல் எந்தவித தடையும் இன்றி நடைபெற்று வந்த போட்டி உணவு இடைவேளைக்குப் பிறகு சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் வானிலை சரியாக இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் 64 ஓவர்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டது. முதலில் நேற்று 98 ஓவர்கள் வீசப்படவிருந்தது.
3ம் நாள் ஆட்டம்
இந்நிலையில் 3வது நாள் ஆட்டமான இன்று எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சவுத்தாம்டன் வானிலை குறித்து வெளியான அறிக்கையில், 2ம் நாள் ஆட்டத்தின் வானிலை போன்றே தான் 3ம் நாள் ஆட்டமும் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வப்போது மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப் பொழிவு
சவுத்தாம்டனில் தற்போது வானம் தெளிவாக உள்ளது. ஆனால் காலை நேரத்தில் 50 சதவீதம் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 4 மணி நேரங்களுக்கு கருமேகங்கள் சூழ்ந்திருக்கும். அடுத்து இங்கிலாந்து நேரப்படி ஒரு மணி அளவில் சற்று மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு 2 மணி நேரங்கள் வானம் தெளிவாகவும், மீண்டும் 4 மணி முதல் மழைப்பொழியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் டே ஆட்டம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. 2ம் நாள் ஆட்டமும் 20 ஓவர்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய 3ம் நாள் ஆட்டமும் மழையினால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே கண்டிப்பாக பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.