முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 3ம் நாள் முடிவு வரை 2 விக்கெட்களை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவிருந்த சூழலில் விடாது கொட்டிய மழையினால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
வானிலை எதிர்பார்ப்பு
இந்நிலையில் 5வது நாள் ஆட்டமான இன்று வானிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வானிலை அறிக்கையில், இன்றைய நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ம் நாள் ஆட்டத்தை ஒப்பிடுகளையில் மழை குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு
நாளொன்றுக்கு 98 ஓவர்கள் வீசப்படவேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய வானிலையை வைத்து பார்க்கும் போது 80 ஓவர்களாவது வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நேரப்படி காலை 7 - 8 மணி வரை மழை இருக்கும். பின்னர் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள்ளும் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மணிக்கு மேலாக மழைத்தூரல்களை எதிர்பார்க்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் டே ஆட்டம்
ஏற்கனவே 2 நாட்கள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் ஆட்டம் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட ஓவர்கள் வீசப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒருவேளை 5ம் நாள் ஆட்டமும் இன்று பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் போட்டி சமனில் முடிவடைந்து இரு அணிகளும் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொள்வார்கள்.