மழையின் குறுக்கீடு
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழையின் காரணமாக 2 நாட்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டாலும், பிட்ச்-ன் தன்மையால் இன்னிங்ஸ்கள் வெகு விரைவாக முடிவடைந்து வருகிறது. இங்கிலாந்து பிட்ச் வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதில் தற்போது நல்ல மழை பெய்து பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகம் உள்ளதால் நல்ல ஸ்விங் கிடைத்து வருகிறது. இதனால் விக்கெட்கள் மலமலவென என வீழ்ந்து வருகின்றன.
பவுலிங் திட்டம்
மழைப்பொழிவு மற்றும் பிட்ச்-ன் தன்மைக்கு ஏற்றவாறு நியூசிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. ஆனால் இந்திய அணி பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் 2 ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. ஆனால் இந்திய அணி கடைசி நாளை மனதில் வைத்துதான் ஸ்பின்னர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
வானிலை மாற்றம்
சவுத்தாம்டனில் கடந்த 5 நாட்களும் மழைப்பொழிவுகளும், போதிய வெளிச்சமின்மையும் இருந்து வந்த நிலையில் ரிசர்வ் டே எனப்படும் கடைசி நாளான இன்று நல்ல வெயில் அடிக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உணவு இடைவெளிக்கு பிறகு உச்சி வெயில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஸ்பின்னர்களுக்கு நல்ல விருந்து காத்துள்ளது. நல்ல வெயில் அடித்து பிட்ச் வறண்டு போனால், பந்தில் நல்ல டேர்னிங் கிடைக்கும். பிட்ச் ஈரப்பதமாக இருந்த போதே அஸ்வின் மற்றும் ஜடேஜா விக்கெட்களை எடுத்து கடும் சவால் கொடுத்தனர். இதில் தற்போது ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறினால் ஜாக்பாட் என்றே கூறலாம்.
வாய்ப்பு
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 32 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் தற்போது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் மதிய நேரத்திற்குள் இந்திய அணி வேகமாக ரன்களை குவித்து டிக்ளர் செய்துவிட்டால், 2வது இன்னிங்ஸில் இலக்கை அடைய நியூசிலாந்து வீரர்கள் பிரஷருக்கு தள்ளப்படுவார்கள். அப்போது இந்திய ஸ்பின்னர்கள் சுலபமாக விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.