இந்திய அணியின் தொடக்கம்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் களமிறங்குகின்றனர். எனினும் எந்தவித தயக்கமும் இன்றி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளித்து முதல் விக்கெட்டிற்கு இவர்கள் 62 ரன்களை சேர்த்தனர்.
3 விக்கெட்கள்
சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 34 ரன்களுக்கு கெயில் ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே சுப்மன் கில் 28 ரன்களுக்கு வாக்னரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் களமிறங்கிய புஜாரா - விராட் கோலி ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்ரெண்ட் போல்ட் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அவர் வீசிய இன் ஸ்விங்கில் நட்சத்திர வீரர் புஜாரா 8 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார். 62 ரன்களுக்கு முதல் விக்கெட் விழுந்த நிலையில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்கள் சரிந்தது.
கோலி - ரஹானே
இதன் பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரஹானே நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி தற்போது 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்துள்ளது. வழக்கமாக பேட்டிங் களமிறங்கிய சில மணி நேரங்களில் அதிரடியை தொடங்கும் விராட் கோலி, பிட்ச்-ன் தன்மையை உணர்ந்து மிக நிதானமாக விளையாடி வருகிறார். இதுவரை 74 பந்துகளை சந்தித்துள்ள அவர், 27 ரன்களை சேர்த்துள்ளார்.
காத்திருக்கும் சிக்கல்
போட்டியின் தொடக்கத்தில் இருந்ததை விட தற்போது பிட்ச்-ல் நல்ல ஸ்விங் இருப்பதால் பந்தை கணிப்பதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று திணறி வருகின்றனர். எனினும் இங்கிலாந்து நேரப்படி இன்று மதியத்திற்கு மேல் சிறிது மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் பெரிய சிக்கல்கள் உள்ளது என்று கூறலாம்.