இந்திய அணி ஓப்பனிங்
இந்திய அணி சார்பில் ஓப்பனிங் களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர். கிடைக்கும் தருணங்களில் பவுண்டரிகளை விரட்டி வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 34 ரன்களுக்கும், சுப்மன் கில் 28 ரன்களுக்கும் அவுட்டாகினர். நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா 8 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
2ம் நாள் முடிவு
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து மேல் சென்றுகொண்டிருக்கிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தொடக்கமே அதிர்ச்சி
இந்நிலையில் வலுவான நிலையில் 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 44 ரன்களுக்கும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 49 ரன்களுக்கு அவுட்டாகினர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஜேமிசன் அசத்தல்
இதன் பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். ஆனால் அவருக்கு மறுமுணையில் சரியான ஜோடி அமையவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் (22), இஷாந்த் சர்மா (4), ஜஸ்பிரித் பும்ரா (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஜடேஜாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய கெயில் ஜேமிசன் 5 விக்கெட்களை எடுத்தார். ட்ரெண்ட் போல் மற்றும் வாக்னர் தலா 2 விக்கெட்களும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.