எதிர்பார்க்காத தோல்வி
முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்த இந்திய அணி, நியூசிலாந்தை 249 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் தொடக்கத்தில் நன்றாக விளையாடிய இந்தியா, அதிரடி காட்ட முயன்று 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 139 என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்தனர்.
கோலியின் விளக்கம்
இந்நிலையில் சில வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தான் இந்தியா தோற்றது என விராட் கோலி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தோல்விக்கான காரணம் என்பது குறித்து ஆலோசனை செய்வோம். நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக டெஸ்ட் அணியில் தேவையான மாற்றத்தை கொண்டு வருவோம். இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் பேட்டிங் வரிசை கடைசி வரை இருக்கும். அனைத்து வீரர்களும் பொறுப்பை ஏற்று ஆட தயாராக இருப்பார்கள். எனவே அதே போன்று டெஸ்ட் அணியிலும் ஏற்படுத்துவோம்.
கடும் குற்றச்சாட்டு
எந்தெந்த பகுதிகளில் அணி சரியாக இருக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் எந்தவித அச்சமும் இன்றி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை மட்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க முடியாது. மேலும் ஒரே பகுதியில் தொடர்ந்து பந்துவீச வேண்டும் என அவர்களை கட்டுப்படுத்த முடியாது என ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக விளாசிய கோலி
இந்த விளக்கத்தை வைத்து பார்க்கையில் விராட் கோலி மறைமுகமாக சட்டீஸ்வர் புஜாரவை குறை கூறுகிறார் என தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் அவர் 54 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் தனது முதல் ரன்னை அடிக்க 35 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதே போல 2வது இன்னிங்ஸில் 80 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.