பந்துவீச்சு திட்டம்
இங்கிலாந்து களத்தில் பேட்டிங்கை விட பவுலிங் முக்கிய பங்கு வகிக்க போகிறது. இதனால் நியூசிலாந்து அணி 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்திய அணியில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களை களமிறக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சில முன்னாள் வீரர்கள் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என தெரிவித்துள்ளனர்.
சவுத்தாம்டன் வானிலை
இந்நிலையில் இந்திய அணியின் பவுலிங் திட்டத்திற்கு வானிலை எந்த அளவிற்கு உதவும் என தெரியவந்துள்ளது. சவுத்தாம்டன் நகரில் தற்போது அவ்வபோது வெயில் அடித்து வந்தாலும் போட்டி தொடங்கும் முதல் நாள் முதல் ரிசர்வ் டே எனக்கூறப்படும் 6வது நாள் வரை கரு மேகங்கள் சூழ்ந்திருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இதே போல அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழியும் என்பதால் ஆட்டம் கண்டிப்பாக பாதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
பிட்ச்சானது ஈரப்பதமாக இருந்தால் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு கைக்கொடுக்கும். ஏனென்றால் ஈரப்பதத்தில் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். எனவே டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக முதலில் பவுலிங் தான் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு வெயில் அடித்து பிட்ச் வறண்டு இருந்தால் மட்டுமேபந்தில் டேர்னிங் இருக்கும். சவுத்தாம்டனில் தற்போது மழை அடிக்கடி வரும் எனக்கூறப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு ஸ்பின்னர்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஏன் ஸ்பின்னர்கள் வேண்டும்
இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இருவரையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏனென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களை கொடுக்க கூடியவர். நியூசிலாந்து பேட்டிங் வரிசையில் அதிகமாக இடது கை வீரர்கள் உள்ளனர். அதே போல ஜடேஜா பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் நன்கு உதவுவார் எனக்கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரின் வாய்ப்பு வானிலையை பொறுத்தே இருக்கிறது.