சிறப்பான தொடக்கம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கெயில் ஜேமிசன் 5 விக்கெட்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேரம் வரை 101 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவாக இருந்தது. நியூசிலாந்து பெரிய ஸ்கோரை அடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 5ம் நாள் ஆட்டத்தில் ஷமி அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.
இந்திய அணி ஆதிக்கம்
நேற்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் விக்கெட்கள் சீட்டுக்கட்டை போன்று சரிய தொடங்கியது. இறுதியில் 249 ரன்களுக்கு அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். பின்னர் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா 5ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
6வது நாள் ஆட்டம்
இந்நிலையில் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் ஆட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் எப்படியும் 90 ஓவர்கள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கொடுத்தால், இந்திய அணி வேகமாக தனது ஸ்கோரை உயர்த்த முற்படும். எவ்வளவு வேகமாக ரன்களை உயர்த்துகிறதோ, அது நியூசிலாந்து அணிக்கு பிரஷரை உண்டாக்கும். இதனால் சுலபமாக அந்த அணியின் விக்கெட்களை சரித்துவிடலாம்.
இந்திய அணி திட்டம்
ஒருவேளை இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றாலும் கூட ரன்களை மிகுந்த கவனத்துடன் கட்டுப்படுத்த முற்படும். ஏனென்றால் ஒரே நாளுக்குள் 2 இன்னிங்ஸ்கள் முடிக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் இந்திய அணி 250 ரன்களுக்கு மேலாக இலக்கை நிர்ணயித்தால் நிச்சயம் போட்டி சமனில் முடிவடைய நேரிடும். எனவே இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வேகமாக ரன்களை குவித்து வெற்றி அல்லது டிரா என்ற நோக்கத்துடன் 'சேஃப் கேம்' விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.