அன்டர் 19 உலககோப்பை தொடரில் சிறப்பு
மும்பையில் பானிப்பூரி விற்றுக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் ஒரு புதிய பரிணாமத்தை அவரது வாழ்க்கையில் கொடுத்துள்ளது. அவரது பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கண்களில் பட்டது ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையை திருப்பி போட்டது. இதையடுத்து படிப்படியாக முன்னேறி, கடந்த அன்டர் 19 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், தொடர் நாயகன் விருதை பெற்று அனைவரையும் கவர்ந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பங்கேற்பு
இந்நிலையில் அவரது திறமையை கண்டு கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வாலை 2.4 கோடி ரூபாக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்காக உத்தரபிரதேசத்தில் உள்ள தன்னுடைய குடும்பத்தை பிரிந்து மும்பையில் பயிற்சியாளரின் வீட்டில் இருந்து யோகா, பிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட ஜெய்ஸ்வால் இதோ இன்று ஐபிஎல்லின் முதல் போட்டியில் விளையாடவுள்ளார்.
தன்னம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்
கடந்த 6 மாதங்களாக வீட்டில் அடைபட்டிருந்த ஜெய்ஸ்வால் குறித்து பேசியுள்ள அவரது பயிற்சியாளர், ஜ்வாலா சிங், அவர் இளம் வீரர் என்றும் அவர் தன்னுடைய திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் தெரிவித்துள்ளார். கடந்த மாதங்களில் கிரிக்கெட் விளையாடாத நிலையில் முதலில் அவர் தன்னுடைய தன்னம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐபிஎல்லின் உலகதர வீரர்களிடம் இருந்து அவர் அனுபவ அறிவை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சிஎஸ்கேவுடன் முதல் போட்டி
முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள ஜெய்ஸ்வால், தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய இரண்டாவது போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.