சிக்கலில் சிஎஸ்கே
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியினர் துபாயில் தற்போது உள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் சிஎஸ்கேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடுமையான நெருக்கடியில் சிஎஸ்கே
இந்த சிக்கலை மேலும் அதிகரிக்கும்வகையில் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் சொந்த காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பியுள்ளார். இதனால் ஐபிஎல்லில் 3 முறை கோப்பைகளை வென்றுள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
ஷேன் வாட்சன் பாராட்டு
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா எப்போதும் சிஎஸ்கேவின் இதயத்துடிப்பு போன்றவர் என்று அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சீசனில் ரெய்னாவை சிஎஸ்கே அணி வீரர்கள் அதிகமாக மிஸ் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரெய்னா குறித்து வாட்சன் நம்பிக்கை
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரெய்னாவை சிஎஸ்கே அணி வீரர்கள் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ரெய்னா கூடியவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று தான் நம்புவதாகவும் வாட்சன் தன்னுடைய வீடியோ மெசேஜில் கூறியுள்ளார். ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் அதாவது 193 போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமை ரெய்னாவிற்கு உள்ளது.