பகலிரவு போட்டி
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியின்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விளையாடவுள்ளார். இந்நிலையில் அஸ்வினின் யூடியூப் பக்கத்தில் பேசிய இஷாந்த் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.
பூர்த்தி செய்யாத தோனி
தான் தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இஷாந்த், ஆனால் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியை நெருங்கிய நிலையிலும் அதை அவர் பூர்த்தி செய்ய விரும்பவில்லை என்றும் எப்போதுமே அணியின் நலன் குறித்தே அவர் யோசித்ததாகவும் குறிப்பிட்டார்.
திடீர் ஓய்வு முடிவெடுத்த தோனி
தான் 100வது டெஸ்ட் போட்டியை பூர்த்தி செய்வதை காட்டிலும் இளம் வீரர் விரித்திமான் சாஹாவின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்று தாங்கள் இங்கிலாந்தில் இருந்தபோது தோனி கூறியதாகவும் அதனால்தான் அவர் திடீரென டெஸ்ட் போட்டிகளில் தனது ரிடையர்மெண்ட் முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று தான் கருதுவதாகவும் இஷாந்த் கூறியுள்ளார்.
தோனி ஓய்வு
கடந்த 2014 -15ல் தோனி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின்போது அறிவித்தார். அந்த போட்டியில் காயம் காரணமாக தான் இடையிலேயே வெளியேறியதாகவும் போட்டியை அடுத்து தன்னிடம் பேசிய தோனி, தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது தன்னை விட்டு சென்றதாக தன்னை கலாய்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விலகியிருக்க மாட்டேன்
ஊசி போட்டுக் கொண்டு தான் அந்த போட்டியில் விளையாடியதாகவும் தோனியின் ஓய்வு குறித்து முன்னதாக தெரிந்திருந்தால் தான் தொடர்ந்து விளையாடி இருந்திருப்பேன் என்றும் இடையில் விலகியிருக்க மாட்டேன் என்றும் இஷாந்த் சர்மா தற்போது கூறியுள்ளார்.