ஸ்டூவர்ட் பிராட் சாதனை
கொரோனாவால் முடங்கியிருந்த சர்வதேச போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் இங்கிலாந்தில் துவங்கி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இந்த தொடரில் மேலும் ஒரு வரலாற்று சாதனையாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
சாதனையை நிகழ்த்திய பிராட்
முதல் போட்டியில் பிராட் சேர்க்கப்படாத நிலையில், அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளின் கிரெய்க் பிராத்வெயிட்டை வீழ்த்தி 500 விக்கெட்டுகள் சாதனையை பிராட் நிகழ்த்தியுள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் மகிழ்ச்சி
இதன்மூலம் சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்திய 7வது நபர் என்ற பெருமை பிராட்டிற்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிராட், ஆனால் இனிவரும் காலங்களில் இந்த சாதனையை நிகழ்த்துவது மிகவும் கடினம் என்றும் அதிகமான போட்டிகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறியுள்ளார்.
அதிர்ஷ்டம் என மகிழ்ச்சி
தான் இங்கிலாந்து அணிக்காக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிராட். இந்த சாதனை குறித்து தான் அதிகமாக சிந்திக்கவில்லை என்றும் ஆனால் முன்னதாக இந்த சாதனையை செய்துள்ள தன்னுடைய அணி வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சனை ஏன் தொடரக்கூடாது என்று தோன்றிய சிந்தனையின் விளைவே இந்த சாதனை என்றும் கூறியுள்ளார்.