ஜுலை 18 சோதனை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து தொடருக்கு ஒன்றரை மாதம் இடைவெளி இருந்ததால் , இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. அதாவது, இந்த 10 நாட்களுக்கு வீரர்கள் பயோ-பபுளில் இருக்க வேண்டியதில்லை. இதனால், இங்கிலாந்தில் பல இடங்களுக்கு வீரர்களுக்கு குடும்பத்துடன் சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "இங்கிலாந்தில் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், நல்லவேளையாக இருவருமே இப்போது நலமுடன் உள்ளனர். அதில் ஒருவருக்கு இப்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு மீண்டும் ஜுலை 18ம் தேதி கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அன்றோடு அவருக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தலும் முடிவடைவதாக" குறிப்பிட்டது.
யார் அந்த வீரர்?
இரு வீரர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்படவில்லை. அதில் ஒருவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால், அவர் மட்டும் தொடர்ந்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், நெகட்டிவ் ரிசல்ட் வந்த உடன், அந்த வீரர் மீண்டும் அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த வீரர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எச்சரிக்கையை மீறி
ஆம்! சாட்சாத் ரிஷப் பண்ட்டே தான். இவருக்கு தான் கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் வரும் 18ம் தேதி சோதனை நடத்தப்படும். அதில், அவருக்கு நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. வீரர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டாலும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரிஷப் பண்ட் எச்சரிக்கையை மீறி இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்றிருந்தார்.
முதல் டெஸ்ட்டுக்கு சிக்கல்
அங்கு ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ரிஷப் பண்ட்டை அடையாளம் கண்டுகொண்ட இந்திய ரசிகர்கள், அவருடன் முண்டியடித்து செல்பி எடுத்துக் கொண்டனர். இதனை ரிஷப்பே தனது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். குறிப்பாக, யூரோ போட்டிக்கு ரிஷப் செல்வதை அறிந்த கேப்டன் கோலி, கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம் என்று கூறியும், மீறி ரிஷப் பண்ட் சென்றதாக தெரிகிறது. ஒருவேளை, பண்ட்டின் தொற்று பாதிப்பு குறையவில்லை எனில், அவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.